கடற்கரையில் மது அருந்தினால் சிறை!! (உலக செய்தி)
அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர்.
இதனால் சமீப காலமாக அங்கு பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இது கோவா அரசுக்கும், பொலிஸாருக்கும் மிகப்பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே இதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுற்றுலா வர்த்தக பதிவு சட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த திருத்தத்துக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் கோவாவில் உள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கும், மதுபாட்டில்களை உடைப்போருக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அதை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதைப்போல சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் சமைப்போருக்கும் மேற்படி தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
Average Rating