இலங்கை ராணுவம் விடிய விடிய தாக்குதல்: 70 விடுதலைப்புலிகள் பலியானதாக தகவல்
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை முகாம் அருகே சிங்கள கடற்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று கடும் சண்டை மூண்டது. 25-க்கும் மேற்பட்ட படகுகளில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் துறைமுகம் நோக்கி வந்தனர். அப்போது இலங்கை ராணுவத்தினர் பீராங்கிகளால் தாக்குதல் நடத்தினார்கள். இருதரப்பினருக்கும் இடையே விடிய விடிய சண்டை நடந்தது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் பற்றி இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திரிகோணமலை துறைமுகம் மற்றும் இதர சில பகுதிகளை மீண்டும் பிடிப்பதற்காக விடுதலைப்புலிகள் 25 படகுகளில் வந்தனர். ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் 11 படகுகள் குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்டன. இதில் விடுதலைப்புலிகள் 70 பேர் பலியாகி விட்டனர்.
ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து 14 படகுகள் முல்லைத்தீவு நோக்கி திரும்பிச் சென்று விட்டன. ராணுவ தாக்குதலில் விடுதலைப்புலிகளின் முக்கிய தீவிரவாதி ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஏற்கனவே திரிகோணமலை மாவட்டத்தில் தாக்குதலுக்கு பயந்து ஏராளமான தமிழர்கள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.