குழந்தைகள் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை !! (உலக செய்தி)
கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். ஜவுளிக்கடை அதிபர். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 11 வயது மகளும், 8 வயது மகனும் இருந்தனர்.
இவர்கள் 2 பேரும் காந்திபுரத்தில் உள்ள பாடசாலையில் 5 மற்றும் 3 ஆம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் தினமும் பாடசாலையிக்கு கால்டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அவர்கள் பாடசாலைக்கு சென்ற போது கடத்தி செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இரு குழந்தைகள் கொலை தொடர்பாக கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் மற்றும் அவனது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜை பொலிஸார் பொள்ளாச்சிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது வெள்ளலூரில் வைத்து அவனை பொலிஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதை அடுத்து மனோகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தார். இதனால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Average Rating