அமெரிக்க ஜனாதிபதி முன்னிலையில் முஷரப்- கர்சாய் மோதல்
அமெரிக்க ஜனாதிபதி முன்னிலையில் பாக் அதிபர் முஷரப்பும் ஆப்கான் அதிபர் கர்சாயும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அதிபர் முஷரப்பும், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயும் அமெரிக்காவில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ் இப்தார் விருந்து அளித்தார். அப்போது முஷரப்பும் கர்சாயும் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்ட தகவல் அமெரிக்க பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
விருந்து நிகழ்ச்சியின் போது தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கர்சாய் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பாக் அதிபர் மறுப்பு தெரிவித்ததோடு கர்சாய் மீது கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து இருக்கிறார்.
சமரசம்
இதைத் தொடர்ந்து இருவரையும் புஷ் சமரசப்படுத்தி உள்ளார். தாலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகவும், ஒசாமா பின்லேடன், முல்லா உமர் ஆகியோருக்கு பாக் அடைக்கலம் கொடுப்பதாகவும் கர்சாய் குற்றம் சாட்டியதாகவும், அதற்கு முஷரப் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
ஆப்கானில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் கர்சாய்க்கு அவரது நாட்டில் நடப்பதே தெரியவில்லை என்று முஷரப் குற்றம் சாட்டியுள்ளார்.