யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவம் குவிப்பு
விடுதலைப் புலிகள் பகுதியில் கடும் தாக்குதலை மேற்கொள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் தெற்கு பகுதியில் பெருமளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். இதனை புலிகள் ஆதரவு இணைய தளம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. வடமராட்சி, தென் மராட்சி பகுதியில பெருமளவு இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இணைய தள செய்தி தெரிவிக்கிறது.
இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறித்து கண்காணிப்புக் குழுவுக்கு புலிகள் தரப்பில் சனிக்கிழமை இரவு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதியை உடனடியாக பார்வையிடுமாறு கண்காணிப்புக் குழுவை புலிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் பகுதிகள் மீது கடுமையான போரை மேற்கொள்ள இலங்கை ராணுவம் முழு அளவில் தயாராகி வருகிறது என்றும் தமிழ்ச் செல்வன் கூறியதாக இணைய தள செய்தி தெரிவிக்கிறது.
நிபந்தனையற்ற பேச்சு நடத்த தயார் என கடந்த செப்டம்பர் 12-ம் தேதி புலிகள், சர்வதேச சமூகத்திடம் உறுதி அளித்தனர். அதே உறுதியை இலங்கை அரசும் அளித்தது.
இந்த உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டுதான் நார்வே சமரச தூதர் ஹான்சன் பாயர் அமைதிப் பேச்சுக்கான இடம், தேதியை முடிவு செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார்.
எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
யாழ்ப்பாண தீபகற்பத்தின் வட பகுதியில் முன்னதாக ராணுவத்தினர் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படை நிலைகளின் மீது இலங்கை போர் விமானங்கள் கடந்த புதன்கிழமை குண்டு வீசி தாக்கின. இது புலிகள் தாக்குதலுக்கு பதிலடி என்று இலங்கை ராணுவம் தெரிவித்தது.
இதனிடையே, இலங்கையின் கிழக்குப் பகுதியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சண்டையில் 50 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயார் என்று கூறிய நிலையில் அதற்கான முயற்சியில் நார்வே முழு முனைப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில் புலிகள்-இலங்கை ராணுவம் தாக்குதல் நீடிப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.