உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைப் போல அல்லாமல், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் நேற்று திங்கட்கிழமை வவுனியா சென்று இடம்பெயர்ந்திருக்கும் மக்களைப் பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இவ்வாறு கூறினார். “பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயங்களை நோக்கி கனரக ஆயுதங்கள், போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற அரசாங்கத்தின் திட்டம் நேர்மையானதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களைப் போன்று இதுவும் அமைந்துவிடக்கூடாது என நான் அஞ்சுகிறேன்” என்றார் அவர்.
“அரசாங்கம் தற்பொழுது அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. களத்தில் என்ன நடைபெறுகிறது என்பதையே நாம் அவதானிக்கிறோம்” என ஹோல்ம்ஸ் கூறினார்.
அத்துடன், பாதுகாப்பு வலயம் எனக் கூறுப்படும் பகுதியில் மேலும் 50,000 பேர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எண்ணிக்கை அரசாங்கத்தின் தகவலைவிடத் துல்லியமானது எனத் தெரிவித்தார். தொடர்ச்சியாக நடந்த மோதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், எனினும், 6,500 பேர் கடந்த மூன்று மாதங்களில் கொல்லப்பட்டதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம், விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லையெனக் குறிப்பிட்ட அவர், ஆயுதங்களைக் கீழே வைப்பது பற்றியோ அல்லது பொதுமக்களை வெளியேற அனுமதிப்பது பற்றியோ அவர்கள் தரப்பிலிருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லையென்றார்.
Average Rating