தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலி
போர் சூழல் காரணமாக வன்னியிலிருந்து படகில் தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 12மணியளவில் இடம்பெற்றது. காக்கிநாடா அருகே சம்பவதினம் நள்ளிரவு 12மணியளவில் வந்த படகினை அவதானித்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோரக் காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் படகில் விரைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு கொத்தபல்லி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. முல்லைத்தீவிலிருந்து தாம் 19பேர் பத்து நாட்களுக்கு முன் இரு படகுகளில் தமிழகம் நோக்கி புறப்பட்டதாகவும், இதில் ஒருபடகில் 09பேரும், மற்றையதில் 10பேரும் பயணித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடலில் திசை தெரியாமல் அலைந்து திரிந்தோம். அப்போது காற்று வேகமாக வீசியதால் ஒன்பதுபேர் படகு கவிழ்ந்த நிலையில் நீரில் மூழ்கினர் என்று தெரிவித்துள்ளனர்.
Average Rating