மலேசிய வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைச் சிறுவன் மீட்பு
சட்டவிரோதமாக மலேசியாவில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை மலேசியப் பொலீசார் மீட்டெடுத்திருப்பதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த எட்டுமாத காலமாக வெளியுலக தொடர்பற்ற நிலையில் பலவந்தமாக வீட்டுப் பணியாளராக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக மலேசிய பொலீசார் கூறியுள்ளனர். சுவிஸ்லாந்திலுள்ள தனது உறவினர் ஒருவருடன் இணையும் நோக்கில் இவர் இலங்கையிலிருந்து முகவர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். சுவிஸ்லாந்திலுள்ள குடும்ப அங்கத்தவரான எஸ்.புஸ்பரட்ணம் என்பவர் தனது பேரன் எட்டு மாதங்களாகியும் சுவிஸ்லாந்தை வந்தடையவில்லை என்ற சந்தேகத்தில் மலேசியாவிலுள்ள நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மலேசிய பொலீசார் எடுத்த துரித நடவடிக்கைகள் மூலம் எட்டுமாத காலமாக பல வீடுகளில் வேலைகள் செய்யவைத்து இம்சிக்கப்பட்ட நிலையில் இருந்த 14வயதான சிறுவனை மீட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ள மலேசியப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Average Rating