வெள்ளவத்தை தொடர்மாடி வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தையில் தொடர்மாடியொன்றில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது சுமார் 40 கிலோ வெடி மருந்துடன் கூடிய 4 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அத்துடன் 25 கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தற்கொலை அங்கிகளை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப் படும் நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குண சேகர தெவித்தார். குறிப்பிட்ட வீட்டிலிருந்த ஏனைய மூவரும் கைது செய்யப் பட்டுள்ளதுடன் அவர்கள் வழங்கிய தகவலின்படி வெள்ளவத்தையில் மேலும் இரு இளைஞர்களும் இரத்ம லானை இராணுவ முகாமிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸாரின் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு வெள்ளவத்தை இல. 55 பெனிகுயின் வீதியிலுள்ள சன்பிளவர் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டனர். கட்டடத்தின் ஏழாவது மாடி வீடொன்றில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் என தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட 4 இளைஞர்கள் தங்கியிருந்தனர். மேற்படி இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டின் (சீலிங்) கூரைப் பகுதியை பொலிஸார் சோதனையிட்டனர்.
இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 தற்கொலை அங்கிகளையும் கிளேமோர் குண்டையும் பொலிஸார் கண்டெடுத்தனர். இச்சமயத்தில் திடீரென சந்தேக நபர்களுள் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியே ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட நபர் சுரேந்திரன் என்றழைக்கப்படும் தாமோதரபிள்ளை சச்சிந்திரன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் கொழும்பு களுபோவில ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜன்னல் வழியாக பாய்ந்த சந்தேக நபர் முதலாவது மாடியில் வெள்ளை இரும்பு சட்டங்களால் அமைக்கப்பட்ட கூரையில் விழுந்து மரணமானார். கல்கிஸ்ஸை மாஜிஸ்திரேட் மேலதிக நீதவான் தர்ஷிகா விமல சிறி சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணைகளை மேற்கொண்டார். கைதான மூன்று இளைஞர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் இராணுவ முகாமிலுள்ள இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைத் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு ஆரம்பமான இத் தேடுதல் நடவடிக்கைகள் நள்ளிரவு 12.00 மணிவரை நடைபெற்றது. சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை தேசிய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
Average Rating