தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?
இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல் காண்பித்தல் ஆகியவை 1967ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் நடத்திய ஈழம் எழும் மாநாட்டு தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கொடுத்த நெருக்கடிகளைத் தொடர்ந்து புலிகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும், தனி ஈழம், பேசுவோர் மீதும் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. வருகிற இருபதாம் திகதி உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடவும் சென்னையில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தவும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை தீர்மானித்திருக்கிற நிலையில் அவசர அவசரமாக இன்றைய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினால் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா. பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பிரபாகரன் படமோ, பேனர்களோ, கொண்டு வந்தாலே அதை வைத்தே இத்தலைவர்களைக் கைது செய்து விட முடியும். ஆனால் தடை செய்யப்பட்ட ஒன்றையல்லாது ஈழம் குறித்துப் பேசுவது எவ்வாறு தவறு ஆகும் என்று ஈழ ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.
Average Rating