தப்பிச் செல்வதற்காக வவுணதீவு வாவியில் குதித்த புலி உறுப்பினர் உயிரிழப்பு
மட்டக்களப்பு வவுணதீவு வாவியில் விடுதலைப்புலி உறுப்பினரொருவரை பொலிஸார் படகில் கூட்டிச்சென்ற போது அவர் வாவியினுள் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் மேலும் தெரிவிக்கையில்; கடந்த சில மாதங்களுக்கு முன் புலி உறுப்பினரொருவர் பொலிஸாரிடம் சரணடைந்தார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலவற்றை மீட்க உதவியுள்ளார். திங்கட்கிழமை மாலை இவரை, வவுணதீவு மாந்தீவுப் பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இடமொன்றுக்கு பொலிஸார் படகில் கூட்டிச் சென்றனர். அவ்வேளையில் இவர் படகிலிருந்து வாவியில் பாய முற்பட்டபோது படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது புலி உறுப்பினரும், அவர் பாயமுற்பட்டதை தடுக்க முற்பட்ட கான்ஸ்டபிளும் வாவியில் மூழ்கினர். இருவரையும் மீட்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது புலி உறுப்பினர் இறந்து விட்டார். கான்ஸ்டபிள் மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
Average Rating