காணாமற் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியை ஏற்றிச்சென்ற ஹெலிகொப்டர் காணாமற்போயிருந்தது. அது இந்திய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, ஆந்திரப் பிரதேசத்தில் மழை பெய்துவருவதால் வானம் தொடர்ந்தும் மேகமூட்டத்துடனேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு சித்தூர் மாவட்டத்திற்கு ஹெலிகொப்டர்மூலம் மலைப்பாங்கான பிரதேசத்தின்மீது பயணித்துக் கொண்டிருந்தபோதே முதலமைச்சர் காணாமற் போனதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றுக்காலை 8.25மணிக்கு சென்ற அவரது ஹெலிகொப்டர் 9.35 மணிவரை ராடர் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அதன்பின்னரே தொடர்பை இழந்ததாகவும் சொல்லப்பட்டது. அங்கு தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் குறித்த மலைப்பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளான நிலையில் ஹெலிகொப்டர் காணப்பட்டதாகவும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உயிரிழந்து விட்டதாகவும் பிந்திய செய்திகள் கூறுகின்றன.
Average Rating