மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் ஐ.நா செயலர் பான்கீ மூன் சந்திப்பு!
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில், ஐ.நா பொதுச்செயலாளர் பான்கீ மூன், ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள், மற்றும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் துணைப்பேச்சாளர் மரியா ஒகாபே தெரிவித்துள்ளார். அத்துடன், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட வேண்டியமை மற்றும் முகாம்களுக்குள் தொண்டு பணியாளர்களுக்கும், பொது மக்களுக்குமான நடமாட்ட சுதந்திரம் போன்ற விடயங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, முகாம்களில் இன்னமும் 3லட்சம் பேர்வரையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்துக் கவலையடைவதாக பான்கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவா தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோதே பான்கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார். முகாம் நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்படாதநிலையில், எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றித் தாம் அச்சமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்க்குடும்பங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு, பிளவுபட்ட குடும்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.
Average Rating