இந்தோனேசியா கடற்பரப்பில் தடுக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் பேசவென ஆஸி பிரதமர் இந்தோனேசியா விஜயம்
படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுவோர் குறித்து, குறிப்பாக சமீபத்தில் இந்தோனேஷியாவில் வழிமறிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 260அகதிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுநடத்த ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் இன்று இந்தோனேஷியாவுக்கு அவசர அவசரமாக விஜயமொன்றை மேற்கொள்கிறார். தற்போது இந்தோனேஷிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும் குறித்த 260இலங்கையர்களும் ஆஸ்திரேலியா தமக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும் என்று கோரிவருகின்ற நிலையில், அவர்களின் கோரிக்கை வெற்றியளிக்குமா இல்லையா என்பது ஆஸி. பிரதமரின் இந்தோனேஷிய விஜயம் முடிந்த பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் உட்பிரவேசிக்க முயன்ற 260இலங்கையர்கள் இந்தோனேஷிய கடற்படையினரால் கடந்தவாரம் இந்தோனேஷியாவின் ஜாவாதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலிய அரசு தங்களுக்கு அரசியற் தஞ்சம் வழங்க வேண்டுமென்று கோரி படகிலிருந்தவாறே எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்தோனேஷியக் கடற்பரப்பில் இந்தோனேஷிய கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டமையால் இவர்கள் சம்பந்தட்ட விடயம் தற்போது இந்தோனேஷியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், எனவே இந்தோனேஷியாதான் இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தோனேஷிய அதிகாரிகளுக்கும் அந்த இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான பேச்சுகள் இதுவரையில் வெற்றிபெறவில்லை. அதேநேரம், ஆஸ்திரேலியாவின் பிரதான எதிர்க்கட்சி, ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்களைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டது என்று கடுமையாகச் சாடிவருகிறது.
One thought on “இந்தோனேசியா கடற்பரப்பில் தடுக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் பேசவென ஆஸி பிரதமர் இந்தோனேசியா விஜயம்”
Leave a Reply
You must be logged in to post a comment.
எங்களால் இலங்கையில் வாழமுடியாது, எங்களை திருப்பி அனுப்பினால் வெடிக்க வைத்துத்து சாவோம்: 9வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.