அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணம்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், 10மீட்டர் நீளம்கொண்ட பிங்க் லேடி என்ற பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜெஸிகா சிட்னியிலிருந்து இப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளார். கடலில் கடும்காற்று வீசி வருவதால் மிகமிக மெதுவாக ஜெஸீகா முன்னேறி வருகிறார். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து படகைச் செலுத்தி வருகிறார். கிட்டத்தட்ட எட்டுமாதம் ஜெஸிகா கடலில் பயணம் செய்யவிருக்கிறார். இது அங்கு சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. இவ்வளவு சின்னவயதில் தனியாக பாய்மரப் படகில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பலரும் விமர்சித்துள்ளனர். ஜெஸிகாவின் தாயார் ஜூலி வாட்சன் இதை நிராகரித்துள்ளார். இதில் பயப்படவோ, தயங்கவோ எதுவும் இல்லை. ஜெஸிகா மிகுந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதலில் வடக்கு நியூசிலாந்து செல்லும் ஜெஸிகா, பின்னர் பிஜி, சமோவா, தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்கா செல்கிறார். கடைசியில் அவர் ஆஸ்திரேலியா திரும்புகிறார். கிட்டத்தட்ட 7400 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் பயணிக்கவுள்ளார். இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், உலகைக் கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
Average Rating