கடன்; 2 குழந்தைகளை எரித்து பெண் தற்கொலை
தமிழகம், ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லை காரணமாக இரண்டு குழந்தைகளை எரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். ஆரல்வாய்மொழி வில்லிவிளையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி அன்னம்மாள். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம செய்து கொண்டனர். திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வந்த அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரல்வாய்மொழி முத்து நகரில் குடிபெயர்ந்தனர். இவர்களுக்கு அபிநயா, என்ற மகளும், விஜய், அபிஷேக் என்ற மகனும் உள்ளனர். ராஜ் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோவாளையில் உள்ள ஒரு செங்கல் சூளை அதிபரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற ராஜ் திடீரென பணத்துடன் வீடடை விட்டு ஓடிவிட்டார். குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த அன்னம்மாளிடம் கடன் கொடுத்த செங்கல் சூளை அதிபர் பணத்தை திரும்ப தரும்படி வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளை கவனிக்க முடியாமல் தவித்து வந்த அவர் கடன் தொல்லை காரணமாக மனம் உடைந்தார். இந்நிலையில் அன்னம்மாள் நேற்று விள்ளவிலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்றார். அபிநயா சுகவீனமாக இருந்ததால் மருந்து வாங்குவதற்காக அவரது உறவினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அன்னம்மாள் மற்றும் அவரது மகன்கள் அபிஷேக், விஜய் ஆகியோர் வீட்டில் இருந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற உறவினர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டிற்குள் அன்னம்மாள், அபிஷேக், விஜய் மூவரும் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், சப்-இன்ஸ்பெக்டர் கிளாரன்ஸ் மேரி ஆகியோர் சம்பவ இடம் சென்று உடல்களை மீட்டு ஆசாரி பள்ளம் மருத்தவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating