நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படலாம்
நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் நாடு கடத்தப்படுவதற்காக முன்னேற்பாடாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள மனிதஉரிமை மீறல் நிலைவரங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் அரசியல் தஞ்சம்கோரும் இலங்கையர்களை நாடு கடத்தவேண்டாம் என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சட்டத்தரணிகள் நெதர்லாந்து அரசைக் கேட்டுள்ளனர். இதேவேளை, அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த ப.தர்ஷன் என்ற இளைஞரை அதிகாரிகள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக நாடுகடத்த முற்பட்டுள்ளனர். எனினும், நீதிமன்றத்தின் தலையீட்டையடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இளைஞர் விமான நிலையம்வரை கொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். நெதர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கையர்கள் 53பேர் பராமரிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு மட்டும் இலங்கையைச் சேர்ந்த 216பேர் அகதி அந்தஸ்து கோரியிருக்கின்றனர் என்று நெதர்லாந்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating