B.J.P ராகுல் மகாஜன் கைது
மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் (31), மருத்துவமனையில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் சாப்பிட்டது, அதற்காக வீட்டைப் பயன்படுத்தியது, சாட்சியத்தை அழிக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப் பொருள் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாள்களுக்குப் பிறகு ராகுல் மகாஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் பிரமோத் மகாஜனின் செயலாளர் விவேக் மொய்த்ரா மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே தில்லி போலீஸ் கூடுதல் துணை ஆணையர் மணீஷ் அகர்வால் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: முழுமையான ஆதாரங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்திருக்கிறோம். அவர் வியாழக்கிழமை இரவு போதைப் பொருள் சாப்பிட்டார் என்பதை நிரூபிக்க எங்களிடம் போதிய ஆதாரங்களும், சாட்சிகளும் உள்ளனர். மேலும் விசாரணைக்காக விரைவில் அவரை போலீஸ் காவலில் அழைத்துச் செல்ல இருக்கிறோம். மருத்துவமனையில் இருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்.
விசாரணையின்போது ராகுல் நிறைய விஷயங்களைச் சொன்னார். விசாரணைக்கு ஒத்துழைத்தார். ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதைக் கூற இயலாது என்றார்.
ராகுல் மகாஜனின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
ராகுல் மகாஜனை மருத்துவமனையில் விசாரித்த போலீஸôர், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ இயக்குநர் அனுபம் சிபல் உள்பட 6 டாக்டர்களை தில்லி துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். மறைந்த பிரமோத் மகாஜனின் மற்றொரு உதவியாளர் ஹரிஷ் சர்மாவையும் போலீஸôர் விசாரித்தனர்.