அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தை செய்ய மாட்டேன் -ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்லவெனத் தெரிவித்திருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். இன்றைய நிலையில் அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லையென சுட்டிக்காட்டியிருக்கும் ஹக்கீம் இது நாவலப்பிட்டியில் தனக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளைத் தடுக்கும் ஒரு சதித்திட்டமெனவும் தெரிவித்துள்ளார். அரசு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு விரைவில் இடம்பெறுமென அரச ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து மறுத்துரைக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பேராதரவு எமக்குக் கிடைத்திருப்பதால் நாவலப்பிட்டியிலுள்ள ஐ.தே.க.ஆதரவாளர்களைத் திசைதிருப்பும் ஒரு முயற்சியாகவே இந்நாடகத்தை ஆளும்தரப்பு அரங்கேற்றி உள்ளது. நாளைய மறுவாக்குப்பதிவின்போது நாவலப்பிட்டி தொகுதி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பேராதரவு எனக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆளும்தரப்பு வேட்பாளரின் அட்டகாசங்கள், அடாவடித்தனங்களுக்கு மத்தியிலும் அந்த மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர். எமக்கு நாளையதினம் கண்டி மாவட்டத்தில் பெருவெற்றி கிட்டும் என்பது உறுதியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating