காங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ குடியரசு. இந்த நாட்டில் சாலை வசதிகள் மிகக்குறைவு. கப்பல் மற்றும் படகு போக்குவரத்துதான் அதிக அளவு நடைபெறுகிறது. இங்கு தஸ்கானியகா என்ற ஏரி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி, தான்சா னியா, ஜாம்பியா ஆகிய நாடுகளை காங்கோவுடன் இத்த ஏரி இணைக்கிறது. இந்த ஏரியில் போக்குவரத்துக்கு சிறு கப்பல்கள் மற்றும் படகுகள் விடப்பட்டுள்ளன.
இந்த ஏரியின் உவிரா பகுதியில் இருந்து பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு சிறு கப்பல் கலீமி என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் பேரல்களில் பெட்ரோலும் மற்றும் கச்சா எண்ணையும் ஏற்றப்பட்டு இருந்தது.
வழியில் கப்பலின் என்ஜீனில் திடீர் என்று தீ பிடித்துக் கொண்டது. தீ மளமள வென்று எல்லா பகுதிகளுக்கும் பரவியது. எண்ணை பேரல்களும் வெடித்து சிதறின. இதில் கப்பலில் இருந்த பயணிகள் 100-க்கும் மேற்பட் டவர்கள் உடல் கருகி பலியாகி விட்டனர். 18 பேர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்கள். கப்பல் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
சாலை விபத்துக்கள் நடப்பது போல காங்கோவில் கப்பல், படகு விபத்துக்கள் நடப்பது வழக்கமாகி விட்டது. அளவுக்கு அதிகமாக ஆட்களையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்வதால்தான் விபத்துக்கள் நடக்கின்றன.