தேடுதல் உட்பட அவசரகால சட்டத்தின் 38 விதிகள் முற்றாக நீக்கம்!
அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38 ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார். பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த இந்த ஒழுங்கு விதிகள் நீக்கப்படுவதால் நாட்டு மக்கள் பாரிய நன்மை பெற்றுக்கொள்ளுவார்கள் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந் நடவடிக்கையை சகல மக்களும் வரவேற்றுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்நடவடிக்கையின் கீழ் அவசரகாலச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளில் பின்வருவன பிரதானமானவை.
ஊரடங்குச் சட்டம், வீடுகளில் குடியிருப்பவர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை, தனியார் கட்டடங்களிலும் வீடுகளிலும் தேடுதல் நடத்துதல், வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளில் வீதித் தடைச் சோதனை உட்பட படையினரின் பங்களிப்பு. அச்சிடுதல், விநியோகித்தல், அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக சபையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவிக்கையில் :- அவசரகால சட்டத்தைத் தொடர்ந்தும் நடை முறையில் வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. என்றாலும் அதனை உடனடியாக முழுமையாக நீக்க முடியாது.
அவசரகால சட்டத்தில் தேவையான சில ஒழுங்கு விதிகள் மட்டுமே இனிமேல் நடைமுறைப்படுத்தப் படும். தற்போதைய சூழ்நிலையில் அவசியமில்லையெனக் கருதப்பட்ட சகல ஒழுங்கு விதிகளும் நீக்கப்பட்டுள்ளன. அவசரகால சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க முடியாது. எனினும் அதனை உடனடியாக முழுமையாக நீக்கவும் முடியாது. சில ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் 14வது ஒழுங்கு விதிகளின் கீழ் சில நடைமுறைகள் உள்ளன. பொலிஸ் பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வீட்டு உரிமையாளர்கள் குடும்பத்தினரின் பட்டியலை பொலிஸில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமில்லை. கடந்த அச்சுறுத்தலான காலங்களில் இதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இன்று அது அவசியமில்லை. இதனால் இந்த ஏற்பாடுகள் அவசரகால சட்டத்திலிருந்து நீக்கப்படுகிறது. இதுபோன்ற பல சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றன. தென்னாபிரிக்க மீளிணக்கக் குழு போன்றதாக மீளிணக்க ஆணைக்குழு இங்கு நியமிக்கப்பட்டு, கடந்த கால அச்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் நாம் கவனம் கொண்டுள்ளோம்.
Average Rating