இலங்கை அதிகாரிகளை சந்திக்க விரும்பாத ஆஸி செல்ல முனைந்து மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்..
அவுஸ்ரேலியாவுக்குப் புகலிட தஞ்சம் கோரிச்சென்று, பின் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எவரும் இலங்கை அதிகாரிகளைச் சந்திக்க விரும்பவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தாம் அகதிகளாக அல்லாமல் சிறைக்கைதிகளாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தமை குறித்து, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார். மேற்படி அகதிகள் தொடர்பில், இலங்கை அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பும் இணைந்து இவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முனைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அகதிகள் பற்றிய புலன்விசாரணைகள் முடியும்வரை, அவர்களைச் சந்திக்க இலங்கை அரசாங்கத்திற்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி, 31பேரும், 24ம் திகதி 75பேருமாக 106 இலங்கை அகதிகள் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating