20 மணி நேரத்தில் எவரெஸ்டு சிகரம் ஏறி இறங்கினார் நேபாள இளைஞரின் உலக சாதனை
நேபாள இளைஞர் ஒருவர் 20 மணிநேரத்தில் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி இறங்கி உலகின் மிகவேகமான மலை ஏற்ற வீரர் என்ற சாதனை படைத்து இருக்கிறார். நேபாளத்தைச்சேர்ந்தவர் தவா ஷெர்பா. இவர் மலைஏற்ற வீரர் ஆவார். மலை ஏறுபவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். இவர் மலை ஏறுவதில் புதிய உலகசாதனை படைத்து இருக்கிறார். இவர் 20 மணி நேரம் 15 நிமிடத்தில் எவரெஸ்டு சிகரத்தில் ஏறி இறங்கி விட்டார்.
கடந்த மே மாதம் 21-ந்தேதி இரவு 9மணிக்கு திபெத் பகுதியில் உள்ள அடித்தள முகாமில் இருந்து மலை ஏறத்தொடங்கினார். உலகிலேயே உயரமான எவரெஸ்டு சிகரத்தை மறுநாள் காலை 8.40 மணிக்கு அடைந்தார்.
அதேநாளில் இறங்கினார்
எவரெஸ்டு சிகரத்தில் 40 நிமிடம் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு கீழே இறங்கத்தொடங்கினார். மாலை 5.15 மணிக்கு அவர் அடிவாரத்தை அடைந்தார். மொத்தம் 20 மணி நேரம் 15 நிமிடத்தில் அவர் ஏறி இறங்கி உலகசாதனை படைத்தார். அவர் எவரெஸ்டு சிகரத்தில் ஏறியதன் அடையாளமாக நேபாள தேசியக்கொடியை நட்டார்.
தவாவுக்கு முன்பு 8ஆயிரத்து 850 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்டு சிகரத்தை பெம்பாடோர்ஜி என்ற வீரர் 8மணி நேரத்தில் அடைந்தார். அவரால் ஏறமட்டும் தான் முடிந்தது. ஆனால் தவா எவரெஸ்டு சிகரத்தை 20 மணி நேரத்தில் ஏறி இறங்கி விட்டார்.