மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தல்..
மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வெள்ளை வேனில் வந்தோரால் இளைஞன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று இரவுவேளையில் ஜீவபுரம் சந்தி வெளியைச் சேர்ந்த 24 வயதான யோகராசா ஜெயசீலன் என்ற இளைஞனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக உறவினர்களால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினரான இவர், வன்னிப் படை நடவடிக்கையினையடுத்து கைதிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டில் சில்லறைக் கடை வியாபாரத்தை மேற்கொண்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டிற்கு வந்த சந்தேக நபர்கள், குறித்த நபருக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர். கல்விச் சான்றிதழ்களையும் ஏனைய ஆவணங்களையும் எடுத்து வரும்படி கூறியுள்ளனர். இதனை நம்பி வீட்டின் வெளியில் உள்ள வீதிக்கு வந்தவேளையில் குறித்த இளைஞனை சந்தேகநபர்கள் வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Average Rating