புலிகளுக்கு நிதி.. சிறை தண்டனை பெறும் முதல் கனடிய தமிழர்!
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் தம்பித்துறை பிரபாகரனுக்கு நாளை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் டொரன்டோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா போலீசாரால் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க கனடா நாட்டு சட்டத்தில் இடமுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பித்துரைக்கு எதிராக வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், அவருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் தம்பித்துரைக்காக வாதாடிய அவரது வழக்கறிஞர், ‘அன்றைய சூழலில் வசூலிக்கப்பட்ட நிதியை அரசிடம் ஒப்படைக்க முடியாத நிலை இருந்தது. காரணம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வசித்தது புலிகளிடன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில். எனவே அந்த நிதியை புலிகளைத் தவிர வேறு யாரிடமும் வழங்கியிருக்க முடியாது. சர்வதேச அமைப்புகளே அந்த சூழலில் புலிகள் மூலம்தான் உதவிகளைச் செய்தனர்” என்றார்.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தண்டனை குறித்த விபரம் அறிவிக்கப்படவுள்ளது. அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கனடாவில் 2006-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating