மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவ முகாம்..!
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவம் தற்போது முகாமிட்டுள்ளதாக எமக்கு அறியகிடைத்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வலையம் 04 கிலேயே இவ்வாறு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எமக்கு கிடைத்த புலனாய்வுச் செய்தி வருமாறு
மன்னார், மதவாச்சி, பிரதான வீதியால் அமைந்திருக்கும் வலையம் நான்கிலேயே இராணுவத்தினர் இவ்வாறு முகாமிட்டுள்ளதாக அறியகிடைக்கின்றது. மதவாச்சியிலிருந்து செல்லும் போது 37 வது கி.;மீ மைல்கல்லடியில் இருந்து இடது புறமாக சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்திலேயே இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். இராணுவத்தினர் முகாமிட்டுள்ள இடத்திலிருந்து 600 மீற்றர் தூரத்தில் மல்வத்து ஓயா ஓடுகிறது. சிறந்த நீர்வளத்தையும், மதுரை, பாலை, வீரை உட்பட பல குளிர்மைத்தரும் மரங்களையும் கொண்ட இந்த பகுதியில் இராணவத்தினர் முகாமிட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் குறித்த பகுதியை இராணுவ பயிற்சி முகாமாக மாற்றும் வேலைத்திட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அறியகிடைக்கின்றது. குறித்த பகுதியைச் வளைத்துப் போட்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளதுடன் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. சுமார் 450 வரையிலான இராணுவத்தினரைக் கொண்டுள்ள இராணுவ குழுவொன்று அங்கு முகாமிட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளுக்குள் செல்லும் பாதையினை முட்கம்பி வேலியினால் மறைத்துள்ளனர். குறித்த பகுதிக்கு சாதாரண மக்களோ, ஊடகவியலாளர்களோ அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன. குறித்த பகுதியில் குடிநீர்வசதியும், மின்சார வசதியும் சிறந்த முறையில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன் நன்மைகளை இராணுவத்தினரே தற்போது அனுபவித்து வருகின்றனர். அத்துடன் இராணுவத்தினரும், அரசியால் வாதிகளின் வாரிசுகளும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதிகளை கையகப்படுத்துவதற்கு பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து வவுனியாவின் அரச அதிகார மட்டத்தினரிடமும் பாதுகாப்பு மட்டத்தினருடனும் வினவிய போது அப்படி எதுவும் இல்லை என மெதுவாக நழுவிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating