உலகில் மிக வயதான நபர் நானே:காஷ்மீர் முதியவர்..!
உலகிலேயே மிகவும் வயதான நபராக தன்னை அறிவிக்கக் கோரி, ஜம்மு- காஷ்மீரில் வசிக்கும் ஜூம்மா கான் என்ற முதியவர், அரசிடம் மனு அளித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லையில் உள்ள போடா கிராமத்தில் வசிப்பவர் ஜூம்மா கான் (140). இவரது 4வது மகன் ஹாஜி தாஜ் முகமது கான் (55), தனது தந்தைக்கு டி.என்.ஏ., பரிசோதனை செய்து, அவரை உலகின் மிக வயதான நபராக அறிவிக்க வேண்டும் என்று கோரி அரசிடம் மனு அளித்துள்ளார். ஜூம்மா கானுக்கு தற்போது 140 வயதாகிறது என, கூறப்படுகிறது. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார். அவருக்கு நான்கு பிள்ளைகள். ஜூம்மா கானின் மூத்த மகனுக்கு 95 வயதாகிறது. கடைசி மகனின் வயது 42 வயது. காஷ்மீரில் அவரது பிள்ளைகள், பேரன் பேத்திகள், கொள்ளு, எள்ளு பேரன் பேத்திகள் என, மொத்தம் 225 பேர் உள்ளனர். இதுகுறித்து நான்காவது மகன் ஹாஜிதாஜ் கான் கூறுகையில், “”எனது தந்தை, தனது 80வது வயதில் எனது தாயாரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். என்னையும் சேர்த்து எட்டுபேர் பிறந்தோம். தற்போது, நாங்கள் பூஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருகிறோம்,” என்றார். முதியவர் ஜூம்மா கான் தற்போது, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார். மெதுவான குரலில் அவர் கூறியதாவது: மன அழுத்தமும், கவலைகளும் தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள். அவற்றை நான் நெருங்க விடுவதில்லை. எந்த நேரமும் நான் சந்தோஷமாக இருக்கிறேன். சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். இதனால், தான் எனக்கு நீண்ட ஆயுள் கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் பால் குடிக்கிறேன். இதுதவிர, இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளையும் தினமும் சாப்பிடுகிறேன். நோய் என்று மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது. 1966ம் ஆண்டில் ஒரு தடவை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டேன். ஆனால், மருத்துவமனைக்கு போகாமல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இரண்டாம் உலகப் போர் நடந்த போது, ஹிட்லரின் ஜெர்மன் ராணுவத்தில் பணியாற்றியிருக்கிறேன். பாகிஸ்தானுக்கு என்னுடைய வயதில் பாதிகூட கிடையாது. அதை இந்தியாவிலிருந்து பிரித்திருக்கக் கூடாது. இரண்டும் ஒரே நாடாக இருந்திருந்தால் மக்கள் சந்தோஷமாக இருப்பர். இவ்வாறு ஜூம்மா கான் கூறினார்.
Average Rating