பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் அடுத்த நகர்விற்காக காத்திருக்கின்றது..!
சர்ச்சைக்குரிய 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட பாராளுமன்றப் பேரவை, ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்விற்காக காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை ஜனாதிபதி பரிந்துரை செய்தால் மட்டுமே பாராளுமன்றப் பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பாராளுமன்ற பதில் செயலாளர் நயாகம் தம்மிக்க கித்துலேகொட தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணைக்குழு, லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு, பொதுசேவைகள் ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவதற்கான பிரதிநிதிகளை ஜனாதிபதி பரிந்துரை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுக்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் வரையில் பாராளுமன்ற பேரவையின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளினது தலைவர்களும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை பரிந்துரை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தைப் போன்று அல்லது, 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் ஜனாதிபதியிடமிருந்தே விடயங்கள் ஆரம்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டத் திருத்தங்களின் அடிப்படையில் பாராளுமன்றப் பேரவையில் சபாநாயகருக்கு கூடுதல் அதிகாரங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating