பிரிட்டிஷ் பெண்ணுக்கு இந்தோனீஷிய நீதிமன்றம் மரண தண்டனை!
போதைப் பொருட்களை கடத்தினார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இந்தோனீஷிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்திலிருந்து பாலித் தீவுக்கு விமானத்தில் வந்திறங்கிய லிண்ட்சே சாண்டிஃபோர்ட் ஐந்து கிலோ கொக்கைனை கொண்டுவந்தார் என்கிற வழக்கில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டார். அவர் மீது வழக்கு தொடுத்த அரசு வழக்கறிஞர்கள் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு கோரினர். எனினும் அவருக்கு குறைந்த தண்டனை அளிக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை என நீதிபதிகள் கூறிவிட்டனர்.
திருமதி சாண்டிஃபோர்டுடன் தாங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எந்த சந்தர்ப்பத்திலும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே பிரிட்டன் கொண்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் இந்தோனீஷியாவில் இருந்தாலும், அங்கு மரண தண்டனை மிகவும் அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது.
Average Rating