மகளிர் கிரிக்கெட்: வென்றது இலங்கை, வெளியேறியது இந்தியா
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவை 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் சிக்ஸ்’ஸுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவோ, போட்டித் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் ஆடிய இலங்கை அணி, தமது 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ஓட்டங்களை எடுத்தனர்.
அந்த அணியில் தீபிகா ரஸாங்கிக்கா அதிகபட்சமாக 84 ஓட்டங்களும், அணியின் தலைவி சசிகலா சிறிவர்த்தன 59 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அடுத்து ஆடிய இந்திய அணி 42.2 ஓவர்களில், 144 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது.
எட்டு அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டித் தொடரிலிருந்து இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து மகளிர் ‘ஏ’ பிரிவிலும், இங்கிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் ‘ பி’ பிரிவிலும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அந்தச் சுற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை(8.2.13) அன்று மும்பை, கட்டாக் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
மும்பையில் இலங்கை மகளிர் நியூசிலாந்து அணியை எதிர்த்தும், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து மகளிரை எதிர்த்தும் ஆடவுள்ளன.
கட்டக் நகரில் மேற்க்கிந்திய தீவுகள் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
Average Rating