3000 பேர் திடீரென புகுந்து கிறிஸ்தவ கிராமம் எரிப்பு :பாகிஸ்தானில் பதற்றம்
லாகூர்: பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி, 3000க்கும் மேற்பட்டோர் திடீரென கிறிஸ்தவர்களின் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை எரித்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூர் அருகில் உள்ளது ஜோசப் காலனி. இங்கு கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் சவான் மசியா என்பவர், முகமது நபிகளையும் இஸ்லாமியத்தையும் இழிவுப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷபீக் அகமது என்பவர் தலைமையில் 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திடீரென ஜோசப் காலனிக்குள் நேற்று புகுந்தனர். அங்கிருந்த சவானின் தந்தை சமான் மசியாவை அடித்து உதைத்தனர். ஜோசப் காலனியில் இருந்த வீடுகளை தீ வைத்து எரித்தனர்.
கும்பல் தாக்குதல் நடத்த தொடங்கியதும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கிராமத்தை விட்டு தப்பியோடினர். இதனால் உயிர் சேதம் எதுவும் இல்லை. எனினும், கிராமத்தை கும்பல் சூறையாடியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மீது கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்ததால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையில், சவான் மசியாவை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் புதிய வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating