சாகாமம் குளத்தில் முதலைத் தாக்குதல், மீன்பிடித் தோணி கவிழ்ந்தது
அதிகாலை வேளை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீன்பிடித் தோணி ஒன்று முதலையின் வால், வீச்சு தாக்குதலினால் கவிழ்ந்துள்ளது. இதனால் தோணியில் இருந்து நீரில் வீழ்ந்த இரு மீனவர்களும் முதலைகளிடமிருந்து தப்பி தெய்வாதீனமாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரிவு சாகாமம் குளத்தில் இடம்பெற்றுள்ளது.
சாகாமம் குளத்தில் வழமைபோன்று தமது மீன்பிடி நடவடிக்கைக்காக தோணியில் மீன்பிடி வலைகள் சகிதம் இரு மீனவர்கள் சென்று மீன்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். திடீரென தோணியின் பின் பகுதியில் பலமாக அடி ஏற்பட்டதுடன் தோணி நிலை குலைந்து நீரில் கவிழ்ந்துள்ளது. தோணியில் நின்று வலை வீசிய மீனவரும் தோணியை செலுத்திய வரும் குளத்தில் மூழ்கியுள்ளனர்.
பின்னர், மீனவர் இருவரும் நீந்தி கரை சேர்ந்துள்ளதுடன் மீன்பிடிக்க பயன்படுத்திய வலை காணாமல் போயுள்ளதுடன் தோணிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
முதலைகள் இரவில் குளத்தில் உணவு உண்ட பின் காலையில் தரைப்பகுதியை நோக்கி வந்து சிறு கிடங்குகளில் பகல் முழுவதும் ஓய்வெடுப்பது வழமையான நிகழ்வு எனவும், தோணியை கவிழ்த்த முதலையும் ஓய்வு எடுக்க வரும்போதே அது தனது வாலால் தாக்கியுள்ளதாகவும் இப்பகுதி மீனவர்களும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.
Average Rating