நீர்கொழும்பில் பொலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நீர்கொழும்பு பிரதேசத்தில் பொலிஸாருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மீனவர் ஒருவரின் கொலை தொடர்பான சந்தேகநபர்கள் அனைவரையும் கைதுசெய்யுமாறு வற்புறுத்தியும் சந்தேக நபர்கள் பொலிஸாரால் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு நகரின் முன்னக்கரை பிரதேசம் முதல் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியும் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, நீதவான் நீதிமன்றம் அருகில் ஆட்டோவில் வந்த குழுவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நீர்கொழும்பு சாந்த ஜோசப் வீதியை சேர்ந்த குருகுலசூரிய சமித் பிரசன்ன பெரேரா என்ற மீனவரின் கொலை தொடர்பாகவே ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களும் நண்பர்களும் பிரதேசவாசிகளும் மீனவர்களும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு பொலிஸாருக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
கொலை செய்யப்பட்டவரும் அவரது மைத்துனரும் கடற்றொழிலுக்கு செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை படகிற்கு தேவையான பொருட்களை ஏற்றுவதற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் மரணமான மீனவர் தலையில் ஏற்பட்ட உள்காயத்துடன் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை மரணமாகியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரையில் சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பு பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனைய ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்து நீதியின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாடத்தில் ஈடுப்டடோர் வலியுறுத்தியுள்ளனர்.
Average Rating