பைக் ஆசாமிகள் அட்டூழியம் ஸ்கூட்டியை இடித்து தள்ளி பெண்ணிடம் நகை பறிப்பு
தோழியுடன் நள்ளிரவில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை இடித்து தள்ளி பைக் ஆசாமிகள் நகையை பறித்து சென்றனர். சென்னை மாநகரில் தொடரும் வழிப்பறியால் பெண்கள் பீதியடைந்து உள்ளனர். அயனாவரத்தை சேர்ந்தவர் லதா (30). இவர், தோழி ராஜலட்சுமி என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணிக்கு ஸ்கூட்டியில் வந்தார்.அங்கு மற்றொரு தோழியை பார்த்து விட்டு இரவு 8.30 மணி அளவில் சுவாமி சிவானந்தா சாலை வழியாக தண்டையார் பேட்டைக்கு புறப்பட்டார். சாலை முழுவதும் இருட்டாக இருந்தது. ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் இருவரையும் 2 ஆசாமிகள் பைக்கில் பின்தொடர்ந்தனர்.திடீரென லதாவின் ஸ்கூட்டியை இடித்து தள்ளினர். இதில், லதா மற்றும் அவரது தோழி நிலை குலைந்து சரிந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசாமிகள் லதா கழுத்தில் கிடந்த 7 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பினர்.இதுபற்றி திருவல்லிக்கேணி போலீசில் லதா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் பெண் கல்வி அதிகாரி ஒருவரிடம் 10 சவரன் செயினும், பிரான்ஸ் நாட்டு மாணவி ஒருவரிடம் செயினையும் ஆசாமிகள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. * சென்னை யானைக்கவுனி எடப்பாளையத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (30), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பவானி (25).நேற்று முன்தினம் பவானி வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் பிராட்வே பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து வெளியே வந்தபோது, வாலிபர் ஒருவர் பவானி கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடினார். திருடன் திருடன் என அவர் கூச்சலிட்டதை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டினார்கள். ஆனால், அவர் ஓடிவிட்டார். இதுகுறித்து சட்டக்கல்லூரி போலீசில் பவானி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பிராட்வே பஸ் நிலையத்தில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். போலீசாரும் ரோந்து செல்வார்கள். இருப்பினும் இங்கு அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் பயணிகளும், பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.
Average Rating