லாகூர் சிறை இந்திய கைதிகள் 20 பேருக்கு மனநிலை பாதிப்பு!!
லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளில், 20 பேருக்கு, மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை’ என, இந்திய நீதிக் குழு தெரிவித்து உள்ளது.
பலத்த காயம்:பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங்கை சிறையிலிருந்த சக பாக் கைதிகள் சமீபத்தில் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்திய சிறைகளில் உள்ள பாக். கைதிகள் மற்றும் பாக் சிறைகளில் உள்ள இந்திய கைதிகளின் நிலை குறித்து அறிவதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய பிரதிநிதிகள் சமீபத்தில் பாக். சென்று லாகூர் கராச்சி ராவல்பிண்டி உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளை பார்வையிட்டனர்.
மன உளைச்சல்:இதன்பின் இந்த குழு வெளியிட்டு உள்ள அறிக்கை:லாகூர், கோட் லாக்பாட் சிறையில், 36 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர், சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடையே, பீதியும் நிலவுகிறது. தாங்களும், தாக்கப்பட கூடும் என, அச்சப்படுகின்றனர்.
மேலும், இங்குள்ள 36 கைதிகளில் 20 பேருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பெண்கள் சிறுவர்கள் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Average Rating