புதிய கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல்!!
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் தற்போது புதிய கடல் மார்க்கத்தை பயன்படுத்துவது கண்டுப்படிக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் பிராந்தியத்தில் கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், கடத்தல்காரர்கள் திருவாணந்தபுரம் கோழிக்கோட்டியில் உள்ள கரையோர பகுதிகளுக்கு மாறி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கேரள கோழிக்கோட்டு பிரதேசத்தில் இருந்து பெரிய மீன்பிடி இழுவை படகுகளின் மூலம் இவர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு கூட்டங்களில் உள்ள மனித சஞ்சாரம் அற்ற தீவுகளுக்கு முதல் கட்டமாக கொண்டுச் செல்லப்படுகின்றனர்.
அல்லது இந்தோனேசியாவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த தீவுகளில் அவர்கள் ஒரு மாதம் வரையில் தங்கவைக்கப்பட்டு, உரிய நேரத்தில் காலநிலையை அவதானித்து அதன்பின்னர் நீண்ட அவுஸ்ரேலிய பயணத்தை மேற்கொள்வதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில தருணங்களில் அவர்கள் கர்நாடகா மற்றும் ஒரிசா மாநிலங்களிலும் இருந்தும் தமது பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
இந்த குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து பயணிக்கும் படகுகள் சுமார் 20 நாட்களில் மேற்கு அவுஸ்ரேலிய கடற்பிராந்தியத்தை சென்றடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மார்க்கத்தின் மூலம் செல்லும் படகுகள் யாவும் மேற்கு அவுஸ்ரேலியாவை சென்றடைவதில்லை. அவற்றில் சில அண்டைய நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டு சிறையடைக்கப்படுகின்றனர். அல்லது அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுகின்றனர்.
அதேவேளை, அவுஸ்ரேலிய அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்ரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 35 சதவீதமானவர்கள் இலங்கையர்கள் என அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Average Rating