தாமல் ஊராட்சி தலைவர் தே.பா. சட்டத்தில் கைது!!
ராமதாஸ் கைது கண்டித்து பெட்ரோல் குண்டுவீசி அரசு பஸ்சை எரித்த வழக்கில் தாமல் ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாமல்லபுரத்தில் கடந்த 25ம் தேதி வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரக்காணத்தில் இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. இதை கண்டித்து அனுமதியின்றி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து கடந்த 30ம்தேதி இரவு தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு சென்ற அரசு பஸ் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. புகாரின்பேரில், பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து தாமல் ஊராட்சி தலைவர் மணிமாறன் (50) உட்பட 11 பேரை கைது செய்தார்.
மக்கள் பிரதிநிதியான ஊராட்சி தலைவரே அரசுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் பஸ்சை எரித்ததால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க போலீசார் எஸ்பி சேவியர் தனராஜிடம் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் உத்தரவின்பேரில் ஊராட்சி தலைவர் மணிமாறன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating