நகை, பணம் கொள்ளை மனைவி திடுக்கிடும் புகார்!!
பாமக முன்னாள் கவுன்சிலர் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வடமாநில சுற்றுலா சென்று திரும்பிய அவரது மனைவி, நகை, பணம் கொள்ளை போயிருப்பதாக புகார் கூறியுள்ளார். குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (72). முன்னாள் பாமக கவுன்சிலர்.
ஜமீன் ராயப்பேட்டை ஆலமரத்தடி தெருவில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்திருந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சரவணகுமார் தனியாக வசிக்கிறார். கிருஷ்ணவேணி வடமாநில கோயில் சுற்றுலாவுக்கு சென்றிருந்தார். வீட்டில் குப்புசாமி மட்டும் தனியாக இருந்தார்.
கடந்த 18ம் தேதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் குப்புசாமி இறந்து கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த பணம், பொருள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் கொலை செய்தவர்கள் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வரவில்லை என தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
ஹார்டுவேர்ஸ் வியாபாரம் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் அவர் செய்துள்ளார். அதில் பலருக்கு கமிஷன் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால், அவரிடம் ஏமாந்தவர்கள் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் சுற்றுலா சென்று நேற்று முன்தினம் வீடு திரும்பிய கிருஷ்ணவேணியிடம் போலீசார் விசாரித்தனர். குப்புசாமி அணிந்திருந்த 11 சவரன் செயின், பீரோவில் இருந்த 3 தங்க நாணயம், ரூ.40 ஆயிரத்தை காணவில்லை என அவர் கூறினார்.
இதை தொடர்ந்து கடை ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Average Rating