சேலத்தில் கள்ளத்தொடர்பால் பயங்கரம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை!!
சேலத்தில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கள்ளத் தொடர்பு காரணமாக கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் வடக்கு கிருஷ்ணன் புதூர் சத்யா நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (எ) கூல் ரங்கநாதன் (74). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள். மகன்களுடன் ரங்கநாதன் வசித்தார். கடந்த 19ம் தேதி காலை வீட்டில் இருந்து சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ரங்கநாதனின் மகன்கள், வீராணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கநாதனின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அவர் கடைசியாக சேலம் பச்சப்பட்டி ஓந்தாப்பிள்ளை காடு பகுதியை சேர்ந்த அப்சரா பானு (41) என்பவரின் மகன் பாஷா (எ) பாதுஷா மைதீனுடன் (23) பேசியது தெரிந்தது.
அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்ததில் ரங்கநாதனை கொலை செய்தது தெரிய வந்தது. பாஷாவின் தந்தை ருக்மான் அலி பிரிந்து சென்று விட்டார். தாய் அப்சரா பானுவுடன் ரங்கநாதனுக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதை பாஷா கண்டித்துள்ளார். அதற்கு, ரங்கநாதன்தான் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார். இதனால் கடந்த 19ம் தேதி ரங்கநாதனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பாஷா.
நண்பர்கள் உதயா (எ) உதயகுமார் (23), பூவரசன் (22), குமரேசன் (22) ஆகியோரை வீட்டுக்கு அழைத்து இருந்தார். அப்போது, ரங்கநாதனிடம் தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்கு ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார். அதற்கு அவர் மறுத்ததால், பாஷாவும் நண்பர்களும் ரங்கநாதனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், தலை, கைகள், கால்களை தனித்தனியாக கூறு போட்டு சாக்கு பைகளில் அடைத்தனர். எருமாபாளையம் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் அந்த சாக்கு பைகளை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
கிச்சிப்பாளையம் போலீசார் கிணற்று பகுதியில் இன்று காலை ஆய்வு செய்தனர். தண்ணீரில் மிதந்த 2 மூட்டைகளை நாய்கள் இழுத்து தரையில் போட்டு இருந்தன. ஒரு மூட்டையை அவிழ்த்து பார்த்த போது, அதில் தலை, ஒரு கால் மட்டுமே கிடைத்தது. மற்றொரு மூட்டையில் உடல் உறுப்புகள் ஏதும் இல்லை.
நாய்கள் இழுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக பாஷா, அவரது தாய், நண்பர்கள் உதயகுமார், பூவரசன், குமரேசன் ஆகியோரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வரதன் கொலையில் ரங்கநாதன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Average Rating