ஊது குழலால் அடித்து துப்புரவு ஊழியர் கொலை!!
தகாத வார்த்தையால் திட்டியதால் ஊது குழலால் அடித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் வீரா (32). சென்னை மாநகராட்சியில் தினக் கூலி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மூலாநல்லி கிராமம். இவருக்கு வேண்டா அமிர்தம் (28) என்ற மனைவியும், சிவா (7), ராகவேந்திரா (4) என்ற மகன்களும் உள்ளனர்.
வீராவின் பக்கத்து வீட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மனைவி செல்வி (40) என்பவர் 18 நாட்களுக்கு முன்பு வந்தார். இந்த வீட்டில் செல்வியின் அண்ணன் மனைவிகள் சிவகாமி, ரேணுகா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
3 பேரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். 3 தினங்களுக்கு முன்பு செல்வி வீட்டில் ரூ.1500 திருடு போனது.
அந்தப் பணத்தை வீராவின் மகன் சிவா எடுத்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட செல்வி, ஜாடையாக பேசியுள்ளார். இதனால் வீராவுக்கும் செல்விக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் செல்வி, சிவகாமி, ரேணுகா ஆகியோர் நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டு வாசலில் போதையில் படுத்திருந்த வீரா, ‘யாருடன் ஊர் சுற்றி விட்டு வருகிறீர்கள்’ என கேட்டு 3 பேரையும் அசிங்கமாக திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, வீட்டுக்குள் சென்று அடுப்பு ஊதும் ஊது குழலை எடுத்து வந்து வீரா வாயில் குத்தினார்.
தொடர்ந்து அவர் பேசியதால், ஊதுகுழலால் தலையில் ஓங்கி அடித்தார். மண்டை உடைந்து மயங்கி விழுந்த வீராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் வீரா இறந்தார்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிளாடன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிந்து செல்வியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating