தேனிலவுக்கு வந்த இடத்தில் சோகம் கேரள புது மாப்பிள்ளை நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!!
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் முள்ளச்சேரியை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் அனீஷ் (29). வீடுகள், அலுவலகங்களுக்கு மர அலங்கார பொருட்களை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி டேனி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு திருச்சூரில் திருமணம் நடந்தது. அனீஷின் உறவினர் ஷீலா சேவியர்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சேலம் ரெட்டிப்பட்டியில் உள்ள டாக்டர்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். தேனிலவு கொண்டாடுவதற்காக, புதுமண தம்பதிகள் நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள ஷீலா வீட்டுக்கு வந்திருந்தனர்.
நேற்று காலை அனீஷ், அவரது மனைவி, உறவினர் ஷீலா, அவரது கணவர், 2 குழந்தைகள் ஆகியோர் சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்றனர்.
அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர், நேற்று மாலை நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது அனீஷ் திடீரென்று, ”டைவ்” அடிக்கும் பலகையில் இருந்து நீச்சல் குளத்தில் குதித்தார்.
மற்றவர்கள் குதூகலமாக குளித்துக் கொண்டிருந்ததால், அவரை பற்றி யாரும் கவனிக்கவில்லை. 10 நிமிடங்களுக்கு மேலாகியும் அனீஷ், மேலே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் நீச்சல் குளத்தில் குதித்து தேடினர். 15 நிமிட இடைவெளியில் அவரை சடலமாக மேலே மீட்டனர்.
இதுகுறித்து, கேரளாவில் உள்ள அனீஷின் உறவினர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. திருமணமான 10 நாட்களில் புதுமாப்பிள்ளை நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம், அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating