குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை!!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் பெருமாள் (30). கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கும், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (25) மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
புவனேஸ்வரி தாய், தந்தையை இழந்த பெண் என்பதால் அவரது உறவினர் திருப்பதி திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களுக்கு இரண்டரை வயதில் சமீகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், புவனேஸ்வரி உறவினரான கேதாண்டபட்டியை சேர்ந்த சண்முகம் நேற்று வடபுதுப்பட்டு கிராமத்துக்கு வந்து பெருமாளையும் புவனேஸ்வரியையும் தங்கள் ஊரில் நடக்கும் கோயில் திருவிழாவுக்கு வருமாறு அழைத்து விட்டு சென்றார்.
பின்னர், தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவரிடம் கோபித்துக் கொண்டு புவனேஸ்வரி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் புவனேஸ்வரி திரும்பி வராததால் பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இரவு 11 மணியளவில் கேதாண்டப்பட்டி சென்று, புவனேஸ்வரி இங்கு வந்தாரா என சண்முகத்திடம் விசாரித்தார். புவனேஸ்வரி அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று காலை வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குழந்தையுடன் பெண் சடலம் மிதப்பதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் கிணற்றில் குழந்தையுடன் பெண் சடலம் மிதந்த தகவல் தெரிந்து பெருமாள் அதிர்ச்சியடைந்தார். அது தனது மனைவி, குழந்தை சடலமாகத்தான் இருக்கும் எனக் கருதி விஷம் குடித்தார்.
மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கிணற்றில் கிடந்த சடலங்கள் புவனேஸ்வரி, அவரது குழந்தை என தெரியவந்தது.
கணவருடன் ஏற்பட்ட சண்டையில், மகளுடன் கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating