1200 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பண்டைய எகிப்து பொக்கிஷங்கள் கண்காட்சியில்!!(PHOTOS)
1200 வருடங்களுக்கு முன்னர் கடலினுள் மூழ்கிய எகிப்தின் ஹெராக்லெயொன் (Heracleion) எனும் நகரின் முக்கிய பொருட்கள் தற்போது காட்சிப் படுத்தப்பட்டு வருகின்றன.
10 வருடங்களுக்கு முன்னர் கடலுக்கடியில் மேற்கொள்ளப் பட்டிருந்த ஆராய்ச்சியில் இந்நகரம் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது. இந்த பண்டைய துறைமுக நகரம் மத்தியதரைக் கடற் பகுதியில் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து 20 மைல் வடகிழக்கே அமைந்துள்ளது
மேலும் கைப்பற்றப் பட்ட மேலதிக பொக்கிஷங்களை தொல்பொருளியலாளர்கள் காட்சிப் படுத்த ஆயத்தம் செய்து வருகின்றனர். கண்டுபிடிக்கப் பட்ட பொருட்களில் 16 அடி நீளமான சிற்பங்களும், தங்க நாணயங்களும், பாரிய வில்லைகளும் முக்கியமானவையாகும். பல நூறு வருடங்களாக செழித்திருந்ததாகக் கருதப்படும் இந்நகரம் தோனிஸ் (Thonis) என்றும் அழைக்கப் பட்டது. இந்நகரில் கண்டுபிடிக்கப் பட்ட பொருட்கள் யாவும் கடல் ஆராய்ச்சி தொல்பொருளியலாளர்களால் மீட்கப் பட்டு வருகின்றன. 2000 ஆம் ஆண்டு வரை இந்நகர் இருந்ததற்கான எந்தவொரு தடயமும் கண்டு பிடிக்கப் படாதிருந்த நிலையில் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கொட்டியோ இனால் ஐரோப்பாவின் கடலடி தொல்பொருள் ஆயுவுக் குழுவின் உதவியால் இந்நகரம் கண்டு பிடிக்கப் பட்டது.
இந்நகரம் பண்டைக் காலத்தில் முக்கிய துறைமுக நகரமாகச் செயற்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வளவு சிறப்புடன் காணப்பட்ட இந்நகரம் திடீரென ஏன் நீரில் மூழ்கியது என ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Average Rating