ஆசிரியைக்கு ஜனாதிபதி உறுதி
புத்தளம், நவகத்தேகம நவோதய மகா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினரால் மண்டியிடச் செய்யப்பட்ட ஆசிரியையிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
குறித்த ஆசிரியைக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பின் ஊடாகவே ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
இதேவேளை, குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார எதிர்வரும் 27 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மாகாண சபை உறுப்பினர், புத்தளம் மாவட்ட நீதிபதி ரங்க திசாநாயக்கவிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமது பாடசாலை ஆசிரியைக்கு நேர்ந்த உரிமைமீறலைக் கண்டித்து மாணவர்களும், பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Average Rating