பொலிவிய ஜனாதிபதியின் விமானம் சோதனையிடப்பட்டமைக்கு தென் அமெரிக்க நாடுகள் கண்டனம்
பொலிவியாவின் ஜனாதிபதி ஈவோ மொரலெஸ் பயணித்த விமானத்தை ஐரோப்பிய நாடுகள் பல தமது வான் பரப்பில் பறக்கத் தடை விதித்து அவ்விமானத்தை சோதனையிட்டமைக்கு தென் அமெரிக்க நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
பொலிவிய ஜனாதிபதி பயணித்த விமானத்தில், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டு தலைமறைவாகி இருக்கும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான ஸ்னோடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்பட்டு பொலிவிய ஜனாதிபதி பயணித்த விமானத்தினை தமது வான்பரப்பில் பறக்கவிட பல ஐரோப்பிய நாடுகள் அனுமதி மறுத்தன.
இவ்விவகாரமானது தற்போது தென் அமெரிக்க நாடுகளில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாட நேற்று வியாழக்கிழமை தென் அமெரிக்க கண்டத்தின் 12 நாடுகள் அடங்கிய உனசுர் அமைப்பு அவசரக் கூட்டத்தினை கூட்டியது.
பொலிவியாவின் மரியாதைக்கு மட்டுமல்லாது தென் அமெரிக்க கண்டத்தின் கௌரவத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பதாகவே இச்சம்பவத்தினைப் பார்ப்பதாக தென் அமெரிக்க நாடுகள் தெரிவித்துள்ளன.
மேலும், இச்சம்பவத்தின் எதிரொலியாக பொலிவியாவின் தலைநகர் லா பாஸிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின் வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் பிரான்ஸ்க் கொடி, ஐரோப்பிய ஒன்றியக் கொடி ஆகியவற்றை எரித்து மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதேவேளை, மொரலெஸை கடத்துவதற்கு அமெரிக்கா முயற்சித்ததாகவும் இதன் பின்னரே ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் தமது வான் பரப்பில் ஜனாதிபதி பயணித்த விமானம் பறக்க அனுமதிக்கவில்லை எனவும் பொலிவியா கடந்த புதன்கிழமை குற்றஞ் சாட்டியது.
இந்நிலையில், நேற்று பிரான்ஸ் குறித்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. ஆனால், இவ்விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்துக் கூற மறுத்துள்ளது.
Average Rating