பாடசாலை மாணவி கடத்தப்பட்டு மீட்பு – இளைஞர் கைது…!!
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பாடசாலை சீருடையிலேயே கடத்திச்சென்றதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுக்காலை 7 மணியளவில் இம்மாணவி கடத்தப்பட்டுள்ளதுடன் 7.45 மணியளவில் சந்தேக நபரை சிறிய ரக லொறி ஒன்றுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாதம்பை பிரதேச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். வழமைபோல் மாணவி தனது சைக்கிளில் பாடசாலை செல்லும்போது அவ்வழியால் வந்துள்ள சந்தேக நபர் மாணவியையும் அவர் பயணித்த சைக்கிளுடன் தான் வந்த சிறிய ரக லொறியில் கடத்திச் சென்றுள்ளார். இச்சம்பவத்தை அவதானித்துள்ள வேறொரு நபர் குறித்த லொறியை பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார். இதேவேளை, இச்சம்பவம் பற்றி அறிந்த குறித்த பாடசாலையின் அதிபரும் ஏனையோரும் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர். இத்தகவலைப் பெற்ற மாதம்பை பொலிஸார் உடன் செயற்பட்டு சிறுமி கடத்தப்பட்ட லொறியைப் பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் லொறியினுள் இருந்த மாணவியையும் அவரது சைக்கிளையும் கைப்பற்றிய பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியுள்ள மாதம்பை பொலிஸார், அவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating