ஒட்டுசுட்டானில் வெளவால் தாக்குதல், ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்..!!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வெள்ளைமலையை அண்மித்த பகுதியினூடாக முல்லைத்தீவை நோக்கி வடி வாகனம் ஒன்றில் ஐந்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தபோது மூன்று வெளவால்கள் சடுதியாக சாரதியையும் அதில் பயணித்த பெண்ணையும் தாக்கியதால் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் அவ் வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பாக்கியம் (வயது 70) என்ற முதியவரே உயிரிழந்தவராவார். இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த க.தளையராஜசிங்கம் (வயது 58), பரமேஸ்வரன் தினுசன் (வயது 25) ஆகியோருடன் மேசன் தொழிலாளி ஒருவரும் கூலித் தொழிலாளி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த ஐந்து பேரும் கடந்த 12ஆம் திகதி வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சென்றுகொண்டிருந்த போது ஒட்டுசுட்டான் வெள்ளைமலை ஏற்றத்தை அண்மித்த பகுதியில் மூன்று வெளவால்கள் வாகனத்திற்குள் உள்நுழைந்து குறித்த வயோதிபப் பெண்ணையும் சாரதியையும் தாக்கியதில் வாகனச் சாரதி நிலைதடுமாறி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாகனம் வீதியின் அருகாமையிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் அவ் வாகனத்தில் பயணித்த ஐந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் காயமடைந்த ஐவரில் மூவரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்திசாலைக்கும் ஏனைய இருவரை யாழ்.வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த வயோதிபப் பெண்ணின் தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டமையால் நேற்று அதிகாலை 3 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Average Rating