அவுஸ்திரேலியாவின் நவுறு முகாமில் கலவரம்..!!
அவுஸ்திரேலியாவினால் நவுறு தீவில் நடத்தப்பட்டு வரும் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் நேற்று கலவரம் வெடித்துள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி கலகம் விளைவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , முகாமின் மருத்துவ நிலையம் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படகுகளில் வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இனிமேலும் அவுஸ்திரேலியாவில் மீள் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் அவர்கள் அனைவரும் பபுவா நியூகினியாவுக்கு அனுப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பு வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே இக் கலகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலகத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஈரானியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கைத் தமிழர்களும் இதில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பலர் சமயலறையில் உபயோகிக்கப்படும் கத்திகளை வைத்திருந்ததாகவும் தெரியவருகின்றது. காவல்துறையினரைத் தாக்கி முகாமை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
கலகம் வெடித்த காரணத்தினால் 60 புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறெனினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் பதினைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் மிகவும் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்து முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating