முழந்தாளிடச் செய்யப்பட்ட ஆசிரியை வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு..!!
வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரினால் முழந்தாளிட வைத்து தண்டனை அளிக்கப்பட்ட நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியையான சுசீலா ஹேரத்தின் வீட்டுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம், ஆனமடுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முழந்தாளிட்ட சம்பவம் தொடர்பில் நவகத்தேகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பிணை நிபந்தனையினை மீறி குறித்த ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும் அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கு ஆனமடுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவருக்கு அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த ஆசிரியையின் வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அங்கு இரு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த சம்பவத்தின் மற்றுமொரு சாட்சியாளரான அப்பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவரின் வீட்டுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரது வீடு கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவை நவகத்தேகம பொலிஸார் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
Average Rating