உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக எண்மர் பங்கேற்பு..!!
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 14ஆவது உலக மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றும் வீர, வீராங்கனைகள் இன்றுகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற நதீக்கா லக்மாலி, அப் போட்டிகளில் ஆண்களுக்கான 4ஒ400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கசுன் கல்ஹார் செனவிரத்ன, டபிள்யூ. ஏ. டி. சி. டி. ஆலோக்க, ரீ. எச். டி. ப்ரியஷான்த, வை. எம். டபிள்யூ. ஜீ. ஏ. எம். குணரட்ன ஆகியோரும் இப் போட்டிகளுக்கான பதில் வீரர்களாக சீ. எம். ஜயசேகர, டி. எம். சில்வா ஆகியோரும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.
இவர்களுடன் பயிற்றுநர் யோகானந்த ஜயசுந்தரவும் முகாமையாளர் கேர்ணல் எஸ். பி. மடுகல்லே ஆகியோரும் செல்கின்றனர்.
இப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப்போட்டியில் பங்குபற்றவுள்ள க்றிஸ்டின் மெரிலும் அவரது பயிற்றுநர் திருமதி டார்சி ஆஹ்னரும் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மொஸ்கோ சென்றடையவுள்ளனர்.
இப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்கள் பெறுவது இலகுவான காரியம் அல்லாதபோதிலும் சர்வதேச அனுபவத்தைப் பெறுவதுடன் அதி சிறந்த பெறுதிகளை இலங்கையர் பதிவுசெய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப் போட்டிகளில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளுக்கான சீருடைகளும் அங்கிகளும் விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை விஞ்ஞான நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜுன் சில்வா ஆகியோரினால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு மொஸ்கோவில் நடைபெறும் உலக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுவோரில் அறுவருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு இந்த சீருடைகளும் அங்கிகளும் வழங்கப்படும் எனவும் இதன் மூலம் இலங்கையின் பொதுவான அடையாளம் உறுதிசெய்யப்படும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating